Friday, 26 April 2024

காத்திருக்கிறேன்

 என்னை அழைத்துக்கொண்டு போ

ஒரு தூரதேசம்

இந்த கவலைகள் எதுவும்

என்னை தீண்டாமல்

அடைக்காத்துக்கொள்


இந்த துயர்

தாங்கொண்ணா வலியை கொடுக்கிறது

சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வலை

தகர்த்து எறிய கூடாததாக


வா...


வந்துவிடு


நான் மரணிக்கும் முன்பாவது...


காத்திருக்கிறேன் நித்தமும் உனக்காக.

Monday, 15 April 2024

காதலை சந்தித்தேன்

 அன்புள்ள உனக்கு...


நான் உன்னை காதலிக்கிறேன். இதை உன்னிடத்தில் சொல்ல வெட்கப்படுகிறேன்.  ஒவ்வொரு முறை நிராகரிப்பிலும்... அய்யோ இது காதலில்லையே என உணர்ந்து அழுதிருக்கிறேன். இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சுருங்கியிருக்கிறேன். 


இன்று 


காதலை சந்தித்துவிட்டேனே என்று அழுது நின்றேன். ஒரு சிறுமி என்னை கேலி செய்யும் அளவிற்கு. நான் அழுதிருக்கிறேன்.

என்ன செய்ய!

நான் வாங்கி வந்த வரம் அப்படி... இதை உன்னிடம் சொல்ல முடியாது. ஒரு வேளை நான் சொல்லி நீ ஏற்காதே போகும் இன்னொரு வலியை தாங்க எனக்கு திறன் இல்லை.

என்றும் உன் நினைவாக...

உன்னவள்

காதல் என்பது

 




காதல் கள் தான்

சடுதியில்

மயக்கத்தில் ஆழ்த்தியது


சிந்திக்க விடாமல்

மனதை அழுத்தியது

பெருந்துயர் வந்து 

ஆட்கொண்டு


பேசாதே போவாயோவென

பயமுறுத்தியது

இத்தனை 

பயமுறுத்தல்களும்

உன்னிடத்தில் இருந்து வந்த

அந்த

Hi - யில் முடிவடைந்தது...


பயத்தை புறந்தள்ளி

மீண்டும் காதலிக்கத் துவங்கிவிட்டேன்

காதலின் வலி உணர்ந்தவன்

இன்னொருத்தியை வலிக்கச் செய்வாயா?

என்ன!


ஒருவேளை

உன் காதல் என் மீது

அபிஷேகிக்கப்படாமல்

போனாலும் கூட


நான் காதலிக்கிறேன்

உன்னை...

என்னுள் இது எத்தனையாவது என்று

தெரியவில்லை...


முன்பெப்போதும்

நெஞ்சுக்கூடு 

சிதறிப்போவதான உணர்வு

ஏற்பட்டதே இல்லை..


வலி

நிராகரிப்பு

பிரிதல்

ப்ளாக் செய்தல்

எல்லாம் வழமை தான்...


இன்றுணர்ந்த வலி

புதிதாகவே

பூத்த மலர் இன்று....

உன் கடைசி காதலி

 



காதல் என்றாலே

மறைத்தலும் ஒட்டிக்கொள்கிறது

உள்ளத்தில்...


எல்லா காதலும்

ஆழத்தில் வலி

இழப்பில்

உயிர் கொல்லும் வலி


காதலை விட

நட்பு தான்

என்னை கொன்று குவித்தது

எங்கிலும்


காதல் கைவரவே

இல்லையே...

எப்பொழுது வருவாய் நீ..


உனக்கு எத்தனை காதல்களும்

இருக்கட்டும்

உன் கடைசி காதலியாக

நான் இருந்தால் போதும்..


அடுத்தொன்று தேடி

நீ எனை பிரிந்து போவதை தாங்க

எனக்குள் ஆற்றல் இல்லை


இப்பொழுதெல்லாம்

என் வாழ்தலுக்கே

நீ தான் ஆற்றலாகிறாய்...

நீயே இல்லாது போனால்?

மகிழ்ச்சியை கொடு

நீ அனுப்பாத 
குறுஞ்செய்திக்காக
இன்று அழுதேன்

ஏன் வலிகளை
தின்னக் கொடுத்தாய்
போதும்...

நிரம்ப
மகிழ்ச்சியை 
கொடு
வாழ்ந்துவிட்டு போகிறேன்

உன் நினைவுகளால்
ஏனும்...


கவிதை சாரல் - 3

 


உன் வார்த்தையின்

குத்து முனைகளை விட

தனிமை பெரும் வலியை

தந்துபோவதில்லை


-------------

முரண் கொள்ளும் கருத்துக்களால்
வலிக்கச் செய்தேனோ வென
தவித்த மனதின் வலியை சமன் படுத்த
தேடுகிறேன் அவனை
எட்டிய திசை யெங்கிலும்
வெட்ட வெளி!

--------------

வார்த்தையில்
மட்டும் தானா?
மனதிலும் விலகல்
நிகழ்வா?

------------------

நெருக்கம்
விடைப்பெற்றதும்
வெறுமையாகிறது
மனது
-------------------





நெஞ்சுக்குள் தோன்றும் ஆசையை
எனக்குள் மறைத்து நோகிறேன்
கண்களில் உயிர்த்து வெளிப்பட
என்னுடன் கதைகள் பேசினேன்
சாலை எங்கும் பூக்கும்
நெஞ்சில் உந்தன் தாக்கம்
விழிகள் நோகும் என்று நான்
நிலத்தில் பார்வை தாழ்த்தினேன்
உயிரை தீண்டும் பார்வையில்
உள்ளுக்குள் சிலிர்த்து வியர்க்கிறேன்
காதல் நெஞ்சில் சேர
மன போதை எல்லை மீற
கனவு என்னும் கீதையை
தினமும் புரட்டி பார்க்கிறேன்
சிரித்து எனக்குள் சிலிர்த்திட
உந்தன் பிம்பம் தேடினேன்
நீயும் என்னுள் வந்தாய்
தீயாய் தேகம் வென்றாய்
பாதை நீளும் சாலையில்
தொடரும் உந்தன் பாதங்கள்
நீண்டு வழியும் நிழலிலே
பதிந்து பிரியும் பார்வைகள்
மனமோ உன்னை நோக்க
விழிகள் எங்கோ பார்க்க
நிறங்கள் தேடி உடுத்தினேன்
மலராய் உன்னை சூடினேன்
முதலில் நீயே பார்த்திட
தவித்து உன்னை தேடினேன்
முகத்தை நீ பார்க்க
வியந்தேன் வெட்கம் பூக்க
உந்தன் கைகள் தீண்டிட
காணும் பொழுது ஏங்கினேன்
நெஞ்சில் சாய்ந்து துயின்றிட
யுகங்கள் பலவும் தாண்டினேன்
நீயும் என்னை தொட்டாய்
பறந்தேன் விண்ணில் சிட்டாய்
எங்கோ நீயும் மறைந்திட
விழிகள் தவித்து தேடினேன்
மாலை கூம்பும் மலர் என
மனது கூம்ப வாடினேன்
நீயும் தவிப்பாயோ
என்னை நினைப்பாயோ

கவிதை சாரல் - 2


 எடுக்கப் படுகிற

முடிவுகள் என்னவோ

முன் அனுபவங்களினால் தான்

எதிர்காலம்

என்னவாகுமென்று

தெரியாத போதும்


-:0:-

ஒவ்வொரு குறுஞ்செய்திக்காகவும்

காத்திருக்கிறது மனம்

நானாக தொடர வாய்ப்பில்லை

நீயாக அனுப்புவாயா?

-:0:-

இந்த அற்ப சந்தோஷத்திற்காகவா

அலைகிறாய் என்றேன்

சந்தோஷத்தில் ஏது

அற்பம் என்றாள்.

-:0:-

பிழைகளோடு 

எழுதினால் என்ன

மழலை பிழை

அற்புதமானது தான்

-:0:-

கொஞ்சம் பேசேன்

கொஞ்சிப் பேசினாலும்

வேண்டாம் எனப்போவதில்லை

-:0:-

Sunday, 14 April 2024

குறுஞ்செய்தி

 





இருள் பழகிய பின்

மென் வெளிச்சம் கண்டது

கண்கள்


புற்களின் பச்சையும்

சிமெண்ட் தரையும்

தொடுத்து வைத்த

கதம்பமாக


கட்டி முடிக்கா

கட்டடம் சூர்ப்பனகையாகி

நின்றாள்


சூர்ப்பனகைக்குள்

பெண்மை உணரா

இராமன் நினைவை 

கலைத்தான்


தூரத்தில் விழித்து

விளையாடிய

விண்மீனை எட்டிப்

பிடிக்க ஆசை

வந்தது


நெருக்கத்தில்

கருப்பழகியாய்

வேப்பமரம்

மென் நடம் புரிந்தாள்


பக்கத்து பாய் வீட்டு

சன்னலில் 

வெளிச்சம் கசிந்தது


நோன்பு கஞ்சி

நாக்கில் ருசி தட்டி

பேரிழப்பாக கதை

பேசியது


எங்கோ சிரிப்பொலிகள்

சிரிக்கிறது

நாய்கள்

குரைக்கிறது


நான் இல்லாமல்

போய்

மென் ஒளியாகிக் கொண்டிருந்த

சமயம்


அந்த குறுஞ்செய்தி

மனுஷியாக

மீட்டெடுத்தது.

Friday, 12 April 2024

எப்போது வருவாய் நீ

 



மெல்ல மெல்ல

உணர்வுகளுக்குள் உட்புகுந்து

தேடுகிறேன்

உன்னை


காற்றும்

நீரும்

நெருப்பும்

ஆகாயம்

திருடியதா உன்னை


எனக்கே எனக்கான நீ

எங்கிருக்கிறாய்

விழிகளில் வழியும்

நீருக்குள்

உட்புகுந்து

கவலைகளை மறக்கடிக்க

எப்போது வருவாய்


கவிதைகள் அல்லாத

கவிதைகளுக்குள்

உட்புகுந்து

என் உணர்வுகள்

தரும் தகிப்பை உணர்வாயா?


வா சீக்கிரமாக

ஒரு நரை முடி

நான் கிழப்பருவம் 

ஏய்துவதாக 

கட்டியம் கூறுகிறது

இன்னமும் உன் மீதான 

ஆசை 

நரைத்தபாடில்லை...

Wednesday, 10 April 2024

கவிதைச் சாரல்









 “ம்”

என்றொரு

உரையாடலை முடித்திருந்தேன்

மீண்டும் தொடர்வதெப்படி

தவித்திருந்தேன்



-:0:- -:0:--:0:-


“சரி”

என்ற சொல்லோடு

முடிந்துவிட்டது

உரையாடல்


மீண்டும் 

துவக்க முடியா

மௌனத்தின்

ஆழத்தில்

மூழ்கிக்கொண்டிருந்தது

உயிர்


-:0:- -:0:--:0:-


காதலில்

கவிதை பொய்மை என்பேன்

அவனை கண்ட நாள் 

நானே கவிதையானேன்


-:0:- -:0:--:0:-


பிழைகளால்

நிரம்பி வழிகிறது

உன் படைப்புகள்

என்றார்கள்


நானே படைப்பாற்றலின்

பிழை என்றேன்

அவர்களிடம்


-:0:- -:0:--:0:-


அவன் கற்பனையா

கனவா என்றாள்

கற்பனை என்றேன்

என் கண்கள் மூடிக்கொள்ளும் பொழுதெல்லாம்

என்னுடன் இருந்தான்

அவன்


-:0:- -:0:--:0:-


குதூகலத்தின்

மறுகோடியை அடைய

உன் ஒற்றை

புன்னகை போதுமானதாக

இருந்தது


-:0:- -:0:--:0:-


சீக்கிரம் இணங்கிவிடாதே

நீ 

எத்தனைக்கும் அதிக

காதலின் ஆழமென

உணர்ந்து பார்க்கட்டும்

இவளின் உயிர்

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...