Thursday, 2 May 2024

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

 








கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்...

----------------------------------------------------------------------------
அன்புள்ள உனக்கு

என் காதலை, நம் காதலாக்கக் கூடிய நீ எங்கே இருக்கிறாய் என்பது எனக்கு தெரியாது. ஒரு வேளை இந்த கடிதம் உன்னை எனக்கு கண்டுபிடித்துத் தரலாம். இது இணையத்தில் எழுதப்படுகிறது. என்னுள் இட்டு நிரப்ப முடியாத வெறுமையை, நீ என்னை நேசிக்கும் போது மாத்திரமே நிரப்ப முடியும் என்று நம்புகிறேன்.

நீ ஏன் என்னை காதலிக்கவில்லை, காதல் என்பது என்னவென்று தெரிந்தால் மாத்திரம் தானே, காதலித்தாயா இல்லையா? என்பதை நான் அறிவேன். சமூகவிதிகளை எல்லாம் கடந்து நீ என்னை காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். திருமண விதிகளுக்கு அப்பாற்பட்டவள் நான். கூனியாகவும், சூம்பிபோன கால்களை உடையவளாகவும் இருக்கிறேன். எனக்குள் அதினதின் பருவத்தில் அதினதின் உணர்வுகள் எழுந்தது. காதலும்.. விதிவிலக்கில்லாமல் காதலனைத் தேடியது. சராசரி மனமுடையவள் தான்.. சராசரி உடல்வடிவு கொண்டவள் அல்ல. நிறைய நிராகரிப்புகள். எனக்கேற்பட்ட நிராகரிப்புகளை சொல்லும் போது நீ என்னை காதலால் முத்தமிடும் துணிவுடையவனாகவும், என் கூன் முதுகை தடவி காதலை உறுதிப்படுத்துபவனாகவும் நீ இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன். வயோதிகத்தின் தளர்ந்த மார்பகங்கள் என் மீது உனக்கு எந்த நாட்டத்தையும் உண்டாக்காது போய்விடுமோ என்று கூட எண்ணி அழுதிருக்கிறேன். நீ என்னை தொட அருவெறுப்பு அடைவாயோவென்று தவித்து அப்படி ஒருவன் என் வாழ்வில் வேண்டவே வேண்டாம் என்று எண்ணியது உண்டு. காதல் உடல் சார்ந்தது என்று நிராகரித்த அத்தனையரும் கூறினார்கள். என் மன உணர்வுகளின் மென்மையும் மேன்மையும் கருகிபோனதைப் பற்றி அவர்களுக்கு எந்த பொறுப்புணர்வும் இல்லை. நான் நேரில் பார்க்கும் போது அதை கூறி ஒரு மூச்சு அழுது ஆறுதல் தேடிக்கொள்கிறேன். நீ என் உடல் நுகர்ந்து மனம் தீண்டாதவனாக வராது, என் மனம் புசித்து என்னை நானே உனக்கு படையலாக்கும் துணிபை தூண்டுபவனாக வா.

கைகோர்த்து நடப்பவர்களை பார்க்கும் போதெல்லாம் நம் விரல்களும் பின்ன வேண்டும் என்று தான் ஆசை. சின்ன சின்ன கதைகள் பெருங்கதைகளாகி, நேரம் கடப்பதே தெரியாத நாட்கள் வரவேண்டும் என்பதும். காதலிக்கத் தெரியாத என்னை நீ காதலில் மூழ்கடித்து, காதல் இதுவென்று பாடம் புகட்ட வேண்டும் என்றும் தோன்றுவதுண்டு.

பறவைகளை பார்க்கும் போதும், மேகங்கள் நகர்தலை பார்க்கும் போதும் உன்னை எண்ணிக்கொள்வேன். வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை பார்க்கும் போதும், அழகாய் பூத்து படர்ந்திருக்கும் காட்டு மரங்களை பார்க்கும் போதும், குரங்குகளின் சேட்டையிலும், நாய்களின் தாய்மையிலும், கோழி தன் குஞ்சை ரெக்கைக்குள் அணைத்துத் தரும் பாதுகாப்பிலும், நீ அப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அணில்கள் ஓடும் போது, இந்த அண்டசராசரத்தையும் படைத்தவனே நீ ஏன் எனக்கு காதலனாக வரகூடாது என்றும் தான் தாகம் கொள்கிறது என் ஆன்மா..
எத்தனை பேராசைக்காரி நான், உன்னையே காதலனாக எதிர்பார்க்கும் ஆசை. உன்னிடம் தான் கேட்கவும் உரிமை இருக்கிறது.. மனிதனாக வா என்னை காதலிக்க, மனிதன் மனுஷியிடம் எதிர்பார்க்கும் உருவ அழகெனும் ஈர்ப்பின் எதிர்பார்ப்போடு வராதே.. என்னை காதலி, என்னை நேசி, எனக்குள் அன்பை விதை, ஆன்மாவை தழுவு... என் வெறுமையை காதலெனும் தீயால் பொசுக்கி எரி. என்னோடு உறவாடு, எனக்காக நேரம் கொடு.

ஒவ்வொரு உயிரினத்திலும், உன் உருவம் காண்கிறேன். அதில் மகிழ்ந்து போகிறேன். இன்னும் அதிக அதிகமான எதிர்பார்ப்பும் கூட காதலெனும் பெரும் வேள்வித் தீயை கடக்க வேண்டுமென எனக்குள் எழும் அந்த தீரா தாகத்தை தீர்க்க இயற்கை பேரருளே, என் காதல் மனம் புரிந்து என் எனக்கு காதல் கொடுக்கும் காதலனாக வா அப்போழுது என் காதல் நம் காதல் ஆகும். அந்த காதலில் கசிந்து போகும் என் வெறுமை.
இப்படி நீ ஏதும் செய்யாத பொழுதிலும், உன்னை காதலிக்கிறேன். உன் இயக்கத்திற்குள் என்னை நினைவு கூர, அல்லது நினைவு கூர்ந்தாலும், உனக்கு நேரம் இல்லாது போகலாம். நேரம் இருக்கும் போது பேசுபவனாக அல்ல, நேரத்தை ஒதுக்கி என்னை தேடுபவனாக வா!

நித்தம் காத்திருக்கிறேன் உனக்காக
காதலுடன்

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...