அன்புள்ள உனக்கு,
உனக்கு எழுதுவதா? அல்லது எனக்கு நானே எழுதிக்கொள்வதா என்று தெரியவில்லை.. எந்த உனக்கு எழுதுவது? என்னில் இருக்கும் உனக்கா? இல்லை நானே வரைந்த ஓவியமான உன்னை வெளியில் தேடி எதார்த்தத்தில் வர ஏங்குகிறேனே.. அந்த எதார்த்தப் புருஷனான உனக்கா?
முன்பொரு முறை நடிக்கவாவது நீ வேண்டும் என்று எழுதியிருந்தேன். ப்ச்... அந்த நாடகக் காதலெல்லாம் வேண்டாம். உண்மையாய்.. முழு பேரன்பைத் தரக்கூடிய நீ எங்கே இருக்கிறாய்? நான் பெண்ணாக இருப்பதால் ஒரு ஆணாகத்தான் உன்னை எதிர்பார்க்கிறேன். எதிர்பாலினம் தானே ஈர்க்கும். நிஜமான காதலைக் கொடுக்கக் கூடியவனாக வா.
காதல் என்பது காத்தல் தானே... நானும் கூட ஒரு அரவணைப்பையும் பாதுகாப்பையும் தான் தேடுகிறேன்.
என் ப்ரியமே..
எது தப்பு, எது சரி என்பதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. நான் ஒரு சிறுவனுக்கு ஆசிரியை முன்பு சைக்கிளில் அமர்ந்தபடி பேசுவது தவறு என்று கற்பித்தேன்.
ஆனால் அதே நான், அதே ஆசிரியை முன்பு என் வீகோவில் அமர்ந்து மழையில் நனைந்தபடி பேசுகிறேன். நான் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரவில்லையா, இந்த இடத்தில் நான் ஒரு சங்கதியைத் தெரிவிக்கிறேன். நான் ஒரு மாற்றுத் திறனாளி என்னால் அதிக நேரம் நிற்க முடியாது.
மாற்றுத்திறன் தகுதியா என்ன? அதிகத்திற்கும் அதிகமான விதிவிலக்குகளைப் பெற...
எனக்கு ஒரு விஷயம் புரிகிறது. என் இலக்குகள் பெரியதாக இருக்கிறது. அதற்கேற்ற போதுமான திறமை அற்றவளாக இருக்கிறேன். நான் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனென்றால் நான் நிர்வாகத் திறன் உடையவளாக மாற விரும்புகிறேன். தொழில் நிறுவனங்களையும், சேவை நிறுவனங்களையும், மாநிலத்தையும், நாட்டையும் சரியானபடி நிர்வகிக்கும் திறமை உடையவளாக விரும்புகிறேன். இது விருப்பம் தான்...
வெறும் விருப்பங்கள் மாத்திரம் நடைமுறைகளை சாத்தியமாக்குவது இல்லை. அதற்கான முயற்சியும், பயிற்சியும் அவசியம் தேவை.
என்னிடத்தில் நிறைய குறைகள் இருக்கிறது. நான் நாய்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள், ஓணான்கள், பல்லிகள், குரங்குகள், கோட்டான்கள் என்று என்று எந்த உயிரினத்திற்கு ஆபத்து என்றாலும் கதறி அழுகிறேன். அதே நான் தான் கவனமின்றி இறைச்சி உண்கிறேன்.
நான் நிலத்திற்கு வீகோவில் போகும் போது, திடீரென ஓணான் ஒன்று குறுக்க்காக வந்துவிட்டது. நான் அதை கொல்லும் நோக்கத்தில் என் வாகனத்தை இயக்கவில்லை. என் வாகனத்தின் சக்கரம் ஏறி அந்த ஓணான் இறந்துவிட்டது. எனக்கு உயிர் போகும் வலி ஏற்பட்டது. சட்டென்று இறங்கி அந்த ஓணானை கையில் எடுத்து கதற மனம் தவித்தது. என் இயலாமை... என்னால் அப்படி செய்ய முடியவில்லை. நான் நிலத்திற்கு போய் திரும்பும்போது... இறந்த ஓணானைச் சுற்று மூன்று ஓணான்கள் இருந்தது. என் இதயம் வெடித்துவிடும் போல் துக்கம் கொண்டது. நான் இன்னும் அதிக துயரத்திற்கு ஆட்பட்டேன். ஓணானே என்னை மன்னித்துவிடு... உன் குடும்பத் துயரத்திற்கு நான் காரணமானேன். என்று புலம்பினேன்.
அறிவு கூறுகிறது அது தற்செயல் என்று... மனதிற்கு அது புரிவதில்லை. நான் நாய்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் நான் பெற்றெடுத்த குழந்தைகள் போல... சமீபத்தில் டோட்டோ பார்வோ வைரசால் இறந்து போனான். நான் அவனை வளர்த்தெடுப்பேன் என்று தான் சாலையில் இருந்து எடுத்தேன். அவன் இறந்து போனது எனக்கு மன வேதனைத் தருகிறது.
சரி அதையெல்லாம் விடு......
நான் என் வாழ்க்கையை நாய்களுக்காக கொடுக்க முடிவெடுத்து உள்ளேன். நீயும் நாய்களை நேசிப்பவனாக இருந்தால், நம் இருவருக்குமான இந்த வாழ்க்கைப் பயணம் அர்த்தப்படும் தானே.. என் வாழ்க்கை நாவலில் வருகிற எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு அத்தியாயம் என்றால், எல்லா அத்தியாத்திலும் நாய்கள் என்னோடு பயணித்திருக்கும். இப்பொழுதும் பயணிக்கிறது. எனக்கு அன்பு வேண்டும். அதுவும் பேரன்பு. இருக்கிற மிச்ச சொச்சக் காலங்களிலெல்லாம் எனக்கானதான முழுமையான அன்பு. இன்னும் எழுத அநேக விஷயங்கள் இருக்கிறது. நேரில் வா... கைக்கோர்த்தபடி பேசித் தீர்ப்போம்.
உன் வருகைக்கான காத்திருப்பில்....
No comments:
Post a Comment